ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரையில் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்துக்கள் அரசாங்க தரப்பில் வெளியாகியுள்ளன.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் மீண்டும் நீதிமன்றத்திடம் விளக்கம் கோர நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிலவேளை, ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது பதவிக் காலம் 19 ஆம் திருத்தச் சட்டத்தின் படியா? அல்லது ஏற்கனவே இருந்த அரசியல்யாப்புச் சட்டத்தின் பிரகாரமா? என்பது தொடர்பில் இதற்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தார். 19 ஆவது திருத்தச் சட்டத்தின் முன்னர் ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்கள் என கூறப்பட்டிருந்தது. 19 ஆவது திருத்தத்தில் 5 ஆக மாற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் 19 ஆவது திருத்தச் சட்டம் அமுலாகும் என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்திருந்தது. இதன்படி, ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 வருடங்கள் என தீர்மானம் ஆகியது.
ஜனாதிபதியின் கருத்துக்கு உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு விளக்கம் அளித்திருந்தது. அக்குழுவுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரியசாத் டெப் தலைமை வகித்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இருப்பினும், ஜனாதிபதியின் தெரிவு பழைய சட்டப்படியே இடம்பெற்றது என்பதனால், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் இன்னும் சந்தேகம் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.