தித்வா அனர்தத்தையடுத்து நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் இம்மாதத்திலிருந்து மேலும் நீடிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இன்று (01) புதன்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாள்ர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
தித்வா அனர்தத்ததின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஏனைய உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதற்கமைய அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.
எவ்வாறிருப்பினும் இம்மாதத்திலிருந்து அவசரகால சட்டத்தை நீடிக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவசரகால சட்டம் அரசாங்கத்தால் முறைகேடாக பயன்படுத்தப்படும் என சிலரால் சமூகத்தில் அச்ச நிலைமையொன்று ஏற்படுத்தப்பட்டது. எனினும் மீள் நிர்மாணப்பணிகளுக்காக மாத்திரமே இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது.
இதன் ஊடாக எந்தவொரு பிரஜைக்கும், ஊடகத்துக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளித்திருந்ததைப் போன்றே, நாம் செயற்பட்டிருக்கின்றோம் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.













