இந்தோனேசியாவில் சுற்றுலா தலமான கோமோடோ தீவுக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்க அந்நாட்டு அரசு திட்மிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
உலக பாரம்பரிய சின்னங்களுள் ஒன்றான கோமோடோ தேசிய பூங்காவின் ஒரு பகுதியான மிக அழகான இந்த தீவிற்கு கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
கிழக்கு இந்தோனேசியாவில் மட்டுமே இருக்கும் உலகிலேயே பெரிய அரிய பல்லி வகையை சேர்ந்த கோமோடோ டிராகன்களை பார்ப்பதற்காக பயணிகள் அதிகமாக இங்கு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டிராகன்களை பாதுகாப்பதற்கும் அந்த டிராகன்களின் விருப்ப இரையான மான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் எருமைகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதற்கும் அங்கு பொது மக்கள் செல்வதற்கு தடைவிதிக்க அரசு திட்டமிட்டுவருகிறது.
மேலும் அடுத்தாண்டு இந்த தீவினை உயர் ரக ((premium)) சுற்றுலா பகுதியாக்கவும், இதற்காக அந்த தீவில் பல தலைமுறைகளாக வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை வெளியேற்றவும் அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980ஆம் ஆண்டு இந்த பூங்கா திறக்கப்பட்டது முதல் தங்கள் நிலங்களை இழந்து வருவதாக கூறும் அப்பகுதியினர், இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும், மக்களை வெளியேற்றாமலும், தீவினை மூடாமலும் டிராகன்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் இந்த திட்டத்தை எதிர்த்து அங்கு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.