ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ள போராட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க உள்ளது.
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக் கோரி, ஹாங்காங்கில் 3 மாதமாக லட்சக்கணக்கான பேர் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆரம்பக்கட்டத்தில் வார இறுதி நாட்களில் மட்டும் நடந்த போராட்டம் தற்போது மற்ற நாட்களிலும் தொடர்கிறது. அண்மையில் விமானநிலையத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதால் கலவரம் மூண்டது.
இதில் பொதுமக்கள் பலரும் காயமடைந்தனர். இதன் விளைவாக 2 நாட்கள் சர்வதேச விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தீவிரவாதிகள் போல போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்துவதாக சாடியுள்ளது.
இந்த நிலையில் ஹாங்காங் எல்லையில் சீனா தனது படைகளை குவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க பல இடங்களில் காவல்துறையினர், போராட்டக்காரர்கள் இடையே ஏற்படும் கலவரத்தில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
சர்வதேச சட்டவிதிகளை மீறி போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை, மிளகுப்பொடி வீச்சு நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போராட்டம் பற்றிய சீனாவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது.