ஸ்பெயின் மேஜர்கா தீவில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் கடற்கரைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஸ்பெயினில் உள்ள மேஜர்கா தீவில் எஸ் டிரென்க் என்ற கடற்கரை அமைந்துள்ளது. அமைதியான சூழலுக்கும், மூன்றரை கிலோ மீட்டர் நீள வெண்மணலுக்கும், தெள்ளத் தெளிவான கடல் நீருக்கும் புகழ் பெற்றது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் சூரியக் குளியலுக்காகவும், இயற்கையை ரசிக்கவும் வந்து செல்வது வழக்கம்.
அவ்வாறு சுமார் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கடலை நோக்கியபடி படுத்துக் கொண்டு கடற்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில் தங்களுக்குப் பின்னால் புகை வருவதைக் கண்டு அதிர்ந்தனர்.
பின், கடற்கரை அருகே இருந்த பைன் மரக்காடுகளில் தீப்பிடித்து எரிவதைக் கண்டு தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். ஹெலிகாப்டர் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் தீ கட்டுப்படுத்தப்பட்டது.
கடற்கரையை இணைக்கும் சாலை பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. முன்னெச்சரிக்கையாக சுற்றுலாப் பயணிகள் கார் பார்க்கிங் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் 2010-ல் நடந்த காட்டுத் தீயில் அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 30-க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரையாகின.