மட்டக்களப்பு வவுணதீவில் பொலிஸார் இருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரானின் உறுப்பினர்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த இவர்கள் கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஸஹ்ரானின் சாரதியிடமிருந்து 7 கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய காத்தான்குடி 2ஆம் பிரிவு மீன் சந்தை வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய அப்துல் மனாப் ஷர்குஸ், புதிய காத்தான்குடி எம்.எம்.ஜே. வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கம்சா முகைதீன் முகமது இம்ரான் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நள்ளிரவு மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பாலத்துக்கு அருகில் கடமையிலிருந்த பொலிஸார் இருவரை இனந்தெரியாதோர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து முன்னாள் போராளிகள் இருவரை கைது செய்ததுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தொடக்கம் முன்னாள் போராளிகள் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோருடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த 6 மாதங்களாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து இத்தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுவந்தனர் .
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 26ம் திகதி காத்தான்குடியில் ஸஹ்ரானின் சாரதியை கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டபோது வவுணதீவு பொலிஸார் கொலையும் ஐ.எஸ். அமைப்பின் தாக்குதலென்பது தெரியவந்திருந்தது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே இத்தாக்குதலில் தொடர்புடைய தற்கொலை குண்டுதாரி ஸஹ்ரானின் உறுப்பினர்களில் மேலும் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.