ஒருவாரம் முன்பு… அந்தச் சனிக்கிழமை மும்பை, திருவிழா கொண்டாடியது. வான்கடே மைதானத்தை மொய்த்தார்கள் நம் ரசிகர்கள். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களிலிருந்து பல படைகள் மும்பையின் தெற்கு கடற்கரையை முற்றுகையிட்டன. மஞ்சளும் ஆரஞ்சும் போதாதென்று நீலமும் அவர்களோடு சேர்ந்தது. மும்பை ஆடவில்லை; அவர்களின் பரம வைரி சூப்பர் கிங்ஸ் மூன்றாவது கோப்பையை முத்தமிடக் களமிறங்குகிறது. ஆனாலும், மும்பைவாலாக்கள் வான்கடேவில் நிரம்பினார்கள். ஏனெனில், இது இந்தியா… இது ஐபிஎல்… இது கிரிக்கெட்!
இந்த ஜூன் 2, அதே மும்பை; வான்கடேவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் `மும்பை ஃபுட்பால் அரேனா’… இந்தியா – சீன தைபே கால்பந்து அணிகள் `Intercontinental cup’ தொடரின் முதல் போட்டியில் விளையாடுகின்றன. 2,569 ரசிகர்களின் `பேராதரவோடு’ சீன தைபேவை நசுக்குகிறது இந்தியா. எட்டு ஆண்டுகள் கழித்து சர்வதேசப் போட்டிகளில் ஹாட்ரிக் அடிக்கிறார் கேப்டன் சுனில் சேத்ரி. இப்போது விளையாடிவரும் கால்பந்து வீரர்களில், அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் ஜாம்பவான்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறுகிறார். அந்தச் சாதனையை நேரில் பார்த்ததும், வாழ்த்தியதும், கொண்டாடியதும் அந்த 2,569 பேர்தான். ஐபிஎல் ஃபைனலுக்கு வந்திருந்த கூட்டத்தில் இது வெறும் 8 சதவிகிதம். ஏனெனில், இது இந்தியா… இது கால்பந்து… இது கிரிக்கெட் அல்ல!
இது ஊரறிந்த விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். இதைப் பற்றி கடந்த சில ஆண்டுகளாகப் பேசிக்கொண்டும் இருக்கிறோம். இப்போது இதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியம்? இருக்கிறது, சுனில் சேத்ரி! அவர் ஹாட்ரிக் அடித்ததைப் பார்க்கவோ, சாதனை படைத்ததைப் பார்க்கவோ யாரும் இல்லை என்பதற்காக இதை எழுதவில்லை. சேத்ரி பதிவிட்ட அந்த வீடியோ… வெறும் 140 விநாடியே ஓடக்கூடிய அந்த வீடியோ, இந்த விஷயத்தை இப்போது மீண்டும் பேசவைத்திருக்கிறது.