3-0 என்ற கோல் கணக்கில் கென்யா அணியைத் தோற்கடித்து, Intercontinental cup கால்பந்துப் போட்டி ஃபைனலில் நுழைந்தது இந்திய அணி. சீனா தைபே, கென்யா, இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் இந்தப் போட்டியில், கடந்த வெள்ளிக்கிழமை சீனா தைபேவை சந்தித்த இந்தியா, 5-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற போட்டியில், 3 கோல் அடித்து கென்யா அணியையும் வீழ்த்தியது. ஜூன் 7 அன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் மோத உள்ளது.
கென்யா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், தனது 100-வது இன்டெர்நேஷனல் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்தார். இந்திய அணியின் இன்னொரு நட்சத்திர வீரரான ஜீஜே லால்பெக்குலாவும் ஒரு கோல் அடித்து வெற்றியை உறுதியாக்கினார்கள். இந்திய மக்கள், ‘கால்பந்தை ஸ்டேடியத்துக்கு வந்து ரசிக்க வேண்டும்’ என்று ட்விட்டரில் வீடியோ பதிவு செய்திருந்தார் சுனில் சேத்ரி. அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், மும்பை அரினா ஸ்டேடியமே நிறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூன் 14 அன்று தொடங்கவிருக்கும் உலகக் கோப்பைக்காக கால்பந்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இந்தியாவின் இந்த வெற்றி, இந்திய கால்பந்து ரசிகர்களை இன்னும் உற்சாகமாக்கியுள்ளது.