மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்தைக் கொண்டிருந்ததால் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அணிகளுக்கு வழங்கப்படும் கால அவகாசங்கள் கணக்கில் எடுக்கப்பட்ட பின்னரும் குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசியுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி தீர்ப்பாளர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்த அபராதத்தை விதித்தார்.
குறைந்தபட்ச பந்துவீச்சு வீதக் குற்றங்கள் தொடர்பான ஐசிசி வீரர் மற்றும் வீரர்களுக்கான ஒழுங்குமுறை விதியின் 2.22 பரிந்துரைக்கு அமைய நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு அணி வீசத் தவறும் ஒவ்வொரு ஓவருக்கும், வீரர்களின் போட்டி கட்டணத்தில் இருந்து ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
மெண்டிஸ் இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, விதிக்கப்பட்ட அபராதத்தை ஏற்றுக்கொண்டதால், சம்பிரதாயபூர்வ விசாரணைக்கு அவசியம் ஏற்படவில்லை.
கள மத்தியஸ்தர்களான லெஸ்லி ரீஃபர், வேய்ன் நைட்ஸ், மூன்றாவது மத்தியஸ்தர் அல்லாஹுதீன் பலேக்கர் மற்றும் நான்காவது மத்தியஸ்தர் கிறிஸ்டோபர் டெய்லர் ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை தாக்கல் செய்திருந்தனர்.











