பயங்கரவாத அமைப்பு என தெரிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வில்லையென தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
பள்ளிவாயல்களில் ஆயுதங்கள், கூரிய வாள்கள் கைப்பற்றப்படுகின்றதே என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,
சில முஸ்லிம் பள்ளிவாயல்களில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் பற்றி நாம் தேடிப் பார்த்தோம். அவற்றில் சில கத்திகள், வாள்கள் பள்ளிவாயலைச் சுற்றி வளர்ந்துள்ள காடுகளைச் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்த வைத்திருந்தவைகளாக இருக்கலாம். சில முஸ்லிம் பள்ளிவாயல்களைச் சூழ மையவாடிகள் அமையப் பெற்றுள்ளன. இவற்றில் காடுகள் வளர்கின்றன. இதனைக் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என கூறினார்.
இதன்போது, ஊடகவியலாளர்கள் அமைச்சரின் பதிலுக்கு அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
அப்போது, மீண்டும் அமைச்சர் இவ்வாறு கூறினார்,
இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் உரிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதில் யார் குற்றவாளி என்பதும் வாள்கள் எதற்காக வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்தும் தெரியவரும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.