நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சூரியகுமார் யாதவ்வின் நிதான துடுப்பாட்ட உதவியுடன் 100 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்த இந்தியா, 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 – 1 என சமப்படுத்திக்கொண்டது.
நியூஸிலாந்தை 99 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா கடும் சிரமத்திற்கு மத்தியில் ஒரு பந்து மீதமிருக்க 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
லக்னோ விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற அப் போட்டியில் இந்தியா 19.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்த 101 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
Hardik Pandya and New Zealand’s fielders shake hands after the game, India vs New Zealand, 2nd T20I, Lucknow, January 29, 2023
அப் போட்டியில் தனி நபருக்கான அதிகபட்ச எண்ணிக்கையாக சூரியகுமார் யாதவ் பெற்ற ஆட்டமிழக்காத 26 ஓட்டங்கள் அமைந்தது.
100 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா சுலபமாக கடந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நியூஸிலாந்தினால் பயன்படுத்தப்பட்ட 7 பந்துவீச்சாளர்களில் 5 சுழல்பந்துவீச்சாளர்கள் மிகத் துல்லியமாக பந்துவீசி இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.
மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் சென்ட்னர், க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி, மார்க் செப்மன் ஆகிய 5 சுழல்பந்துவீச்சாளர்கள் 17 ஓவர்கள் வீசி 78 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தனர்.
ஜேக்கப் டஃபி, லொக்கி பேர்கசன், ப்ளயார் டிக்னர் ஆகிய வேகப் பந்துவீச்சாளர்கள் 2.5 ஓவர்களே வீசினர்.
Mitchell Santner and Mark Chapman celebrate with team-mates, India vs New Zealand, 2nd T20I, Lucknow, January 29, 2023
எவ்வாறாயினும் இந்தியா சார்பாக நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ், அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை வெற்றிபெறச் செய்தனர்.
சூரியகுமார் யாதவ் 26 ஓட்டங்களுடனும் ஹார்திக் பாண்டியா 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையான 19 ஓட்டங்களை இஷான் கிஷன் பெற்றார்.
நியூஸிலாந்து பந்துவீச்சில் மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். மற்றைய 2 விக்கெட்கள் ரன் அவுட்களாக அமைந்தன.
முன்னதாக அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களைப் பெற்றது.
அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் அதிகபட்சமாக 19 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். அவரை விட மார்க் செப்மன், மிச்செல் ப்றேஸ்வெல் ஆகிய இருவரும் தலா 14 ஓட்டங்களைப் பெற்றனர்.
சிறப்பாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஹார்திக் பாண்டியா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்த்ர சஹால், தீப்பக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.