மெல்பர்னில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் எலினா ரிபக்கினாவை கடும் சவாலுக்கு மத்தியில் வெற்றிகொண்டு அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சம்பியன் பட்டத்தை அரினா சபாலென்கா சுவீகரித்தார்.
நிரல்படுத்தலில் 5ஆம் இடத்தை வகித்த பெலாரஸ் வீராங்கனையான 24 வயதுடைய சபாலென்கா வென்றெடுத்த முதலாவது மாபெரும் டென்னிஸ் (கிராண்ட் ஸ்லாம்) சம்பியன் பட்டம் இதுவாகும்.
யூக்ரெய்ன் மீதான யுத்தத்தின்போது ரஷ்யாவுக்கு ஆதராவாக பெலாரஸ் செயற்பட்டதால் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் சபலென்கா நடுநிலையான கொடியின்கீழ் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டார்.
அரை இறுதிப் போட்டிவரை ஒரு செட்டைத்தானும் விட்டுக்கொடுக்காமல் விளையாடிவந்த சபாலென்கா, இறுதிப் போட்டியில் முதலாவது செட்டில் ரிபக்கினாவிடம் 4 – 6 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்தார்.
ஆனால், 2ஆவது செட்டில் எதிர்நீச்சல் போட்டு 6 – 3 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற சபாலென்கா, தீர்மானம் மிக்க கடைசி செட்டில் 6 – 4 என வெற்றிபெற்று சம்பயினானார்.
விம்பிள்டனில் கடந்த வருடம் சம்பியனான எலினா ரிபக்கினாவினால் 2ஆவது கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது.