மெல்பர்ன், ரொட் லேவர் டென்னிஸ் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்டெஃபானஸ் சிட்சிபாசை வெற்றிகொண்ட நோவாக் ஜோகோவிச், 10ஆவது அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டத்தை சுவீகரித்ததுடன் ரபாயல் நடாலின் 22 கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் சமப்படுத்தினார்.
ஒரு வருடத்திற்கு முன்னர் கொவிட்-19 தடுப்பூசியைப் போடத் தவறியமைக்காக அவுஸ்திரேலிய அரசினால் வெளியேற்றப்பட்ட சேர்பிய வீரரான ஜோகோவிச், இந்த வெற்றியுடன் டென்னிஸ் வரலாற்று நாயகர்களில் ஒருவரானார்.
மூன்று மணித்தியாலங்களுக்கு சற்று குறைவான நேரத்தில் நிறைவடைந்த இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6 – 3, 7 – 6, 7 – 6 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் 35 வயதான ஜோகோவிச் வெற்றிகொண்டார்.
இதன் மூலம் மெல்பர்ன் இறுதிப் போட்டியில் விளையாடிய 10 சந்தர்ப்பங்களிலும் அவர் சம்பியனாகியுள்ளதுடன் அங்கு 28 தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றிய கடைசி 4 சந்தர்ப்பங்களிலும் ஜோகோவிச் சம்பியனானது மற்றொரு சாதனையாகும். தொழில்முறை டென்னிஸ் ஆரம்பமான பின்னர் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் இந்த சாதனையை படைத்த முதலாவது வீரர் ஜோகோவிச் ஆவார்.