‘ஐ.என்.எக்ஸ்., மீடியா’ வழக்கில், முன்ஜாமினை ரத்து செய்த, டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், எந்த உத்தரவையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அதே நேரத்தில், 26ம் தேதி வரை, அமலாக்கத் துறை கைது செய்யக்கூடாது என, உத்தரவிட்டுள்ளது.மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீட்டைப் பெற, 2007ல் அதற்கு அனுமதி வழங்கப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர், சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, அவருடைய மகன் கார்த்தியின் தலையீட்டால் அனுமதி வழங்கப்பட்டதாக, இந்த அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன.இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம் தொடர்ந்திருந்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது.
நான்கு நாட்கள்
அதைத் தொடர்ந்து, அவரை, சி.பி.ஐ., அதிகாரி கள் கைது செய்தனர். வரும், 26ம் தேதி வரை, நான்கு நாட்கள் காவலில் விசாரிக்க, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், நேற்று முன்தினம் அனுமதி அளித்தது.டில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில், நேற்று இந்த மனுக்களை, நீதிபதிகள், ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்தது.சிதம்பரம் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர். மத்திய அரசின் சார்பில், சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டார்.ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறைகளுக்கு எதிராக, இரண்டு மனுக்கள், சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மறுப்பு
அதில், முன்ஜாமினை ரத்து செய்யும் உயர் நீதிமன்ற உத்தரவு மற்றும் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்க்கும் சிதம்பரத்தின் மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க, உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது.அதே நேரத்தில், வரும், 26ம் தேதி வரை, இந்த வழக்கில், சிதம்பரத்தை, அமலாக்கத் துறை கைது செய்யக் கூடாது என, உத்தரவிட்டுள்ளது.வழக்கின் விசாரணை, 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
‘ஏர்செல் – மேக்சிஸ்’ வழக்கு செப்., 3க்கு ஒத்திவைப்பு
‘ஏர்செல் – மேக்சிஸ்’ மோசடி வழக்கில், முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம் தாக்கல் செய்துள்ள வழக்கின் தீர்ப்பு, செப்., 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏர்செல் – மேக்சிஸ் மோசடி வழக்கில், முன்ஜாமின் கேட்டு, சிதம்பரம் சார்பில், டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், அவருடைய மகன் கார்த்தியும் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை ஒத்தி வைக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மறுத்துவிட்டார். வழக்கின் தீர்ப்பை, செப்., 3ம் தேதி அளிப்பதாக அறிவித்தார்.