கிரீன்லாந்தை அமெரிக்கா விலைக்கு வாங்கப்போவதாக செய்தி வெளியான நிலையில், ‘கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை’ என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஆனி லோன் பேகர்(Ane Lone Bagger)தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய தீவாக இருக்கும் ‘கிரீன்லாந்து’ வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடலுக்கு இடையே உள்ளது. சுமார் 8 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இந்த தீவு டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் தனியாட்சி பிரதேசமாக உள்ளது.
இங்கு அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ‘துலே’(thule)விமான தளம் உள்ளது. மேலும் இயற்கை வளம் பொதிந்த நாடு என்பதால், அமெரிக்காவை போல், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அதிபர் டிரம்ப் வருகிற செப்டம்பர் மாதம் டென்மார்க் மற்றும் கிரீலாந்து பிரதமர்களை சந்திக்க இருக்கிறார். இந்தநிலையில், கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது குறித்து டிரம்ப் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின.
இதனை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ள கிரீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனி லோன் பேகர், வணிகத்துக்கு மட்டுமே கிரீன்லாந்து திறந்திருக்கும், விற்பனைக்கு அல்ல என தெரிவித்துள்ளார். இதேபோல், டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென்(Lars Lokke Rasmussen), ‘இது ஏப்ரல் ஃபூல் காமடியாக இருக்கும்’ என வேடிக்கையாக தெரிவித்தார்.
இதற்கு முன்னர், கடந்த 1946ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஹாரி ட்ரூமனும் கிரீன்லாந்தை வாங்க முயற்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.