தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். நடிகர் தனுஷின் சகோதரரான இவர், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம்.
தற்போது, சூர்யாவை வைத்து என்.ஜி.கே., என்ற படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிவடைந்து விட்டது. ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், படத்திற்கான புரமோஷன் வேலைகள் நடக்கின்றன. இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் வித்தியாசமான தகவல் ஒன்றைக் கூறி இருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது : நடிகர் எஸ்.ஜே.சூர்யா – ரெஜினா நடித்து, நான் இயக்கி இருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தப் படத்தில், என் பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. அந்தப்படம், முடிவடைந்த நிலையில் இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும், அந்தப் பாடலை படமாக்கி விட்டு வந்து, பாடல் குறித்து என் மனைவிடம் சொன்னேன். அவருக்கு என் மீது கடும் கோபம் வந்து விட்டது. அவர் மோசமாக என்னிடம் நடந்து கொண்டார். அந்தப் பாடலை இயக்கியதற்காக, என்னை செருப்பால் அடித்தார். குடும்ப உறுப்பினர்களும் என்னை திட்டினர்.
இவ்வாறு செல்வராகவன் கூறியிருக்கிறார்.
நெஞ்சம் மறப்பதில்லை படம், பைனான்ஸ் பிரச்னையால், ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது.