இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் மலைச் சரிவில் நடிகை மஞ்சுவாரியார் உள்ளிட்ட படக் குழுவினர் சிக்கி உள்ளனர்.
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களான டில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை மழை புரட்டி எடுக்கிறது. கடுமையான மழையைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச் சரியும் ஏற்பட்டிருக்கிறது. இந்த மழை மற்றும் நிலச் சரிவில் சிக்கி, இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் இதுவரை 43 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்.
இந்நிலையில், படபிடிப்புக்காகச் இமாச்சலப் பிரதேசத்துக்கு சென்ற நடிகை மஞ்சுவாரியார் உள்ளிட்ட படக் குழுவினர், நிலச் சரிவு ஏற்பட்டிருக்கும் பகுதியில் இருப்பதால், அங்கிருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்.
மலையாள இயக்குநர் சணல் குமார் இயக்கத்தில், நடிகை மஞ்சுவாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மலையாளப் படம் ஒன்றை, இமாச்சலப் பிரதேசத்தின் சத்ரா பகுதியில் வைத்து படபிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.
அந்த சமயத்தில், பெரு மழை-வெள்ளம் ஏற்பட, இமாச்சல பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும், தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. மழை-வெள்ளத்தின் பாதிப்பாக நிறைய இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், படக் குழுவினர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதற்கிடையில், சேட்டிலைட் போன் ஒன்று கிடைக்க, அதை வைத்து, கேரளாவில் இருக்கும் தன்னுடைய சகோதரர் மது வாரியரை அழைத்து, தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொன்னார் மஞ்சு வாரியர்.
இதையடுத்து, அமைச்சர் முரளீதரனை தொடர்பு கொண்ட மது வாரியர், மலையாளப் படக் குழுவினர், இமாச்சல பிரதேசத்தில் சிக்கி இருப்பதைச் சொல்லி, அவர்களை மீட்க உதவிடுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். இதையடுத்து, மஞ்சுவாரியர் படக் குழுவினரை மீட்க, அரசுத் தரப்பினர், தீவிரமாக முயன்று வருகின்றனர்.