பிக்பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்ற வனிதா மீண்டும் போட்டியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனின் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டவர் நடிகை வனிதா விஜயகுமார். முதல் மூன்று வாரங்கள் பல பிரச்சினைகளை கூட்டி, பரபரப்பை கிளப்பினார். இதனால் கெட்டப் பெயரை சம்பாதித்தார்.
இதையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது வாரமே வெளியேற்றப்பட்டார். அதுவரை சந்தைக்கடையாக இருந்த பிக்பாஸ் வீடு, வனிதா போன பிறகு காதல் பூங்காவாக மாறியது. முக்கோண காதல், முழங்கால் காதல் என விதவிதமான காதல் பூக்கள் மலர்ந்து உதிர்ந்தன.
ஆனால் பிக்பாஸ்க்கு இதனால் எந்த பயனும் இல்லை. டிஆர்பி எகிறாததால் கவலையில் ஆழ்ந்த பிக்பாஸ் வனிதாவை மீண்டும் களமிறக்கினார். முதலில் அவர் சிறப்பு விருந்தினராக தான் உள்ளே அழைத்து வரப்பட்டார். வந்ததும் வராததுமாக பல பிரச்சினைகளை கூட்டினார். இதனால் பிக்பாஸ் வீடு மீண்டும் சந்தை கடையாக மாறியது.
ஒரிரு வாரங்கள் இருந்துவிட்டு வனிதா வெளியேறிவிடுவார் என்று தான் மக்கள் நினைத்தனர். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியின்போது வனிதா ஒயில்ட்கார்டு மூலம் மீண்டும் போட்டியாளராக வந்துள்ளதாக அறிவித்து மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார் பிக்பாஸ். ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் இது பெரிய ஷாக் தான்.
விருந்தினராக இருந்தபோதே பல பிரச்சினைகளை செய்தவர் வனிதா. இப்போது மீண்டும் போட்டியாளராக வேறு அறிவிக்கப்பட்டுள்ளார். இனி தான் பிக்பாஸ் வீட்டில் கச்சேரி களைகட்டப்போகிறது.