அனல் பறந்த முதல் டெஸ்ட்: வித்தை காட்டிய இங்கிலாந்து வீரர்கள்…போராடி டிரா செய்த இந்திய வீரர்கள்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் குக்கின் அபார ஆட்டத்தால் இங்கிலாந்து, இந்திய அணிக்கு 310 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராஜ் கோட்டில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 537 ஓட்டங்களும், இந்திய அணி 488 ஓட்டங்களும் எடுத்திருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 260 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் இங்கிலாந்து அணியின் தலைவர் குக் சதம் கடந்து 130 ஓட்டங்கள் குவித்தார். மற்றொரு ஆட்டக்காரரான ஹமீத் 83 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 310 ஓட்டங்களை நிர்ணயம் செய்துள்ளது.
அதன் பின்னர் 49 ஓவரில் 310 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் விஜய் (30), காம்பீர் (0) என வெளியேறினர்.
அடுத்து வந்த புஜாரா 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தி்ல் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.அடுத்து களம் இறங்கிய இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
ஆனால் அவருக்கு ஈடுகொடுத்து ஆடாமல் அடுத்தடுத்து வந்த இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணி 71 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது தோல்வியை நோக்கில் சென்று கொண்டிருந்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு கோஹ்லியுடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கில் விளையாடி வந்தனர். இந்த ஜோடி போட்டியை டிராவில் முடித்துவிடும் என்று நினைக்கையில் அஸ்வின் 32 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அன்சாரி பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்து வந்த சகா 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரஷித் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் மறுமுனையில் விராட் கோஹ்லி மட்டும் நம்பிக்கையுடன் விளையாடினார்.இதனால் இந்திய அணி இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்கள் எடுத்திருந்த போது இரு அணி தலைவர்களும் போட்டியை டிரா செய்து கொள்வதாக சம்மதம் தெரிவித்தன்பேரில் ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.