ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தற்போது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இடம்பெறுகின்றது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில், ஜிஎல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும ஆகியோர், அந்தக் கட்சி சார்ப்பில் பங்கேற்கின்றனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில், மஹிந்த அமரவீர தலைமையில் தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட பேச்சுக்களில் இழுபறி நிலை காணப்பட்டதை அடுத்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பசில் ராஜபக்ச தலைமையில் இன்றைய பேச்சு இடம்பெறுகின்றது.
இன்றைய பேச்சில் இணக்கப்பாடு எட்டப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சந்தித்து, கூட்டணியை அமைப்பதற்கான இறுதி நிபந்தனைகள், இணக்கப்பாடுகளை எட்டுவார்கள் என, சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.