பேர்ப்பச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவ னப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் நான்காவது நாளாக இன்றும் பிணை முறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகவுள்ளார்.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தி னால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை தெளிவுபடுத்தும் நோக்கிலும் விசேட அறிக்கையொன்றை வழங்கவுமே அவர் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்னிலையில் ஆஜராகியிருந்தார். நாளைமுதல் அர்ஜுன் அலோசியஸிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை பதிவுச்செய்யவுள்ளது. கடந்த நான்கு நாட்களும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையும் நாளை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அர்ஜூன் அலோசியஸிடம் நான்கு நாட்கள் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் நாளை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அரச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பேப்ச்சுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸை மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஆணைக்குழு சாட்சியமளிக்க அழைத்தமையை சவாலுக்கு உட்படுத்தி சட்டவரைபு ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அலோசியஸின் சட்டத்தரணி அர்ஜூன் பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அர்ஜூன் அலோசியஸ் நாளைசாட்சியமளிப்பதற்கு முன்னர் சத்தியகடதாசி ஒன்றை வழங்கவேண்டும் என்றும் ஆணைக்குழு நேற்று முன்தினம் உத்தரவிட்டமையை குறித்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த சட்ட நடவடிக்கையின் அடிப்படையில் ஆணைக்குழு தமது உத்தரவை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று கோரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அலோசியஸ் நாளை சாட்சியம் வழங்கும்போது ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும் அவர் சார்பில் முன்னிலையாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு வழங்கிய சாட்சியப்பதிவுகளை பார்வையிட ஊடகவியளாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஏற்கனவே பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி கலந்துரையாடல்கள் அனைத்தும் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்பில் அர்ஜூன் அலோசியசின் நிலைப்பாடு தொடர்பாக விசாரணைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குரல் பதிவுகளின் அடையாளங்கள் தொடர்பில் அவர் விளக்கமளித்திருப்பதாக தெரியவருகின்றது.