நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களுக்குத் தலா 150,000 ரூபா வீதம் மொத்தம் 3 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்குகளிலேயே இத்தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கீரி சம்பா அரிசி கிலோகிராம் ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 5 கிலோகிராம் அடங்கிய பொதியொன்றை கிலோ ஒன்று 350 ரூபா வீதம் அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
வெல்லவாய – யாலபோவ பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட ‘பொன்னி சம்பா GR 11’ அரிசி கிலோகிராம் ஒன்றின் கட்டுப்பாட்டு விலை 240 ரூபாவாக உள்ள நிலையில், அதனை கிலோ ஒன்று 260 ரூபாவிற்கு சில்லறை விற்பனை செய்த மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் தம்மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, இருவருக்கும் தலா 150,000 ரூபா வீதம் தண்டப்பணம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.













