அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளரினால் அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசியமான தேவைகள் மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டுமே வெளிநாட்டு பயணங்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் ஒரே காலப்பகுதியில் தொடர்ச்சியான வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செலவினங்களை கட்டுப்படுத்தல்
அரச ஊழியர்களின் அடிக்கடி மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பயணங்களால் ஏற்படும் செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சு தரப்பிலிருந்து இதுவரை மேலதிக உத்தியோகபூர்வ விளக்கம் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











