நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நுளம்புக் குடம்பிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை திங்கட்கிழமை (8) முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 74 சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளைப் பிரதான கேந்திர நிலையங்களாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 5ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 36,168 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுளம்புப் பெருக்கமும் அதிகரித்துள்ளது. அதற்கமைய கொழும்பு (கொழும்பு மாநகர சபையும்), கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, புத்தளம், கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நோய்த்தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இந்நிலையில், நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 74 சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளைப் பிரதான கேந்திர நிலையங்களாகக் கொண்டு ஜூன் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்களும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், தன்னார்வத் தொண்டர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மாதம் மாத்திரம் நாட்டில் சுமார் 8,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இம்மாதம் இதுவரை 2,315 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகையினால் நீடித்த காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் கபில பி. ஜயரத்ன வலியுறுத்தியுள்ளார்.











