சேலத்தில் அரசு பொருட்காட்சியை திறக்க வந்த முதல்வரை சந்திக்க போலீஸ் அனுமதி மறுத்ததால் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் இருந்து சென்னை வரையில் 8 வழிச்சாலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என்றாலும் விவசாயிகளின் அனுமதியை பெற்று 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என தமிழக அரசு உறுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் மனு கொடுப்பதற் காக காத்திருந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப் பட்டனர். விழா நடக்கும் இடத்திற்குள் செல்லாத வகையில் சுற்றிவளைத்துக் கொண்டனர். மாலை 6.15 மணியளவில் விழா நடக்கும் இடத்திற்கு முதல்வர் வந்தார். அவரிடம் மனு கொடுப்பதற்காக விவசாயிகள் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 வழிச்சாலைக்கு எதிராகவும், முதல்வருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், “2 பேர் மட்டும் வாருங்கள். முதல்வரை சந்தித்து மனு கொடுக்கலாம்’ என்றனர். 20 பேர் வருகிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர். அதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்தது.
இந்நிலையில் விழாவை முடித்துகொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். முதல்வரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் விவசாயிகள் திரும்பினர்.