நாட்டின் ஐந்து மாவட்டங்களில் பெய்து வரும் அடை மழையினால் 11 ஆயிரத்து 387 குடும்பங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்து 91 பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று மாலை தெரிவித்துள்ளது.
கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக காலி, மாத்தறை,களுத்துறை, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களே கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் ஆகக்கூடிய மழைவீழ்ச்சி கட்டுநாயக்க பிரதேசத்திலேயே பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.
மேற்படி மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக ஏற்பட்டுள்ள மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களால் நேற்று மாலை வரை ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அனர்த்தங்களால் 22 வீடுகள் முழுமையாகவும் 282 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதனால் 878 குடும்பங்களைச் சேர்ந்த 3ஆயிரத்து 488 பேர் 16 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.