நாட்டின் சில மாவட்டங்களுக்கு இன்றும் அதனைத் தொடர்ந்து வரும் சில நாட்களுக்கும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சுமார் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யுமெனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இத்தினங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் கடலுக்குச் செல்லும் மீனவர்களும் கடற்படையினரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் சீரற்ற காலநிலை காரணமாக அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் மண்சரிவு, வௌ்ள அபாயம் உக்கிரமடைய வாய்ப்பு இருப்பதனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்கள் அதற்கான அறிகுறிகளைக் கண்டால் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
அதிக மழையுடன் களுகங்கை, ஜின்கங்கை மற்றும் நில்வளா கங்கையின் நீர்மட்டங்களும் நேற்று காலை முதல் படிப்படியாக உயர்வடைந்துள்ளன. இதனால், அதனை அண்டிய தாழ்நிலப் பிரதேசங்களில் வாழ்வோரை தற்காலிகமாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.