யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக அதிகளவான அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ஒன்றரைக் கிலோ அபின் போதைப்பொருளே நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி தொண்டமனாறு – கெருடாவில் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் சந்தேகத்துக்கு இடமாக இருவர் நடமாடியுள்ளனர். இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் வருவதைக் கண்ட அவர்கள், பொதி ஒன்றை போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.
அந்தப் பொதியைச் சோதனையிட்டபோதே அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் பொதியினை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இவ்வளவு பெறுமதியான அபின் போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.