எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட நீர் பம்பிகள் முதலானவற்றை திருடி விற்பனை செய்துவந்த திருடர் குழுவினரை பொலிஸார் நேற்று முன்தினம் (3) கைதுசெய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் வீட்டுக்கூரையை பிரித்துக்கொண்டு உள்ளே இறங்கி, எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்களை களவாடிச் சென்று, விற்பனை செய்துவந்த குழுவினரை கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஜீம் தலைமையிலான குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்தே இவ்வாறு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது களவாடப்பட்ட 17 எரிவாயு சிலிண்டர்கள், 5 நீர் இறைக்கும் கருவிகள், ஒரு துவிச்சக்கரவண்டி, ஒரு றோல் கோஸ் பைப், ஒரு சுவர் வெட்டும் இயந்திரம் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைதான 21, 23 வயதுகளையுடைய சந்தேக நபர்களோடு திருடப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்ததாக கூறப்படும் 26 வயதுடைய சந்தேக நபரையும் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நிந்தவூர் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறுகின்றனர்.