இலங்கை மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8ஆவது மாஸ்டர்ஸ் கூடைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பின் ஆரம்ப தினமான 04 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் கொழும்பு கூடைப்பந்தாட்ட சங்கம், புளூஸ் கழகம், பொலிஸ் கழகம், வத்தளை கூ.சு., ஓல்ட் கேம்ப்றியன்ஸ், 76சர்ஸ் கழகம் ஆகியன தலா 2 வெற்றிகளை ஈட்டி தத்தமது வயது பிரிவுகளில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகளை அதிகரித்துக்கொண்டுள்ளன.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் கூடைபந்தாட்டப் போட்டிக்கு கஜா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2ஆவது தடவையாக அனுசரணை வழங்குகிறது.
ஆண்களுக்கான 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஓஎஸ்எஸ்சி (23 – 20), ப்ளூஸ் (27 – 15) ஆகிய கழகங்களை கொழும்பு கூடைப்பந்தாட்ட சங்க அணி வெற்றி கொண்டது.
35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ப்ளூஸ் அணி 2 வெற்றிகளை ஈட்டியுள்ளது.
ஆல் க்றீன்ஸ் (49 – 40), ஸ்பார்ட்டன்ஸ் (21 – 16) ஆகிய கழகங்களை ப்ளூஸ் அணி வெற்றி கொண்டது.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் பொலிஸ் கழகம், வத்தளை கூடைப்பந்தாட்ட கூ.ச., ஓல்ட் கேம்ப்றியன்ஸ் ஆகியன தலா 2 வெற்றிகளை ஈட்டியுள்ளதால் அடுத்த சுற்றுக்கு செல்வதில் கடும் போட்டி நிலவுகிறது.
ஓல்ட் தேவன்ஸ் அணியை 36 – 22 என்ற புள்ளகள் அடிப்படையில் வெற்றிகொண்ட பொலிஸ் கழகம் அடுத்த போட்டியில் அம்பலாங்கொண்டை கழகத்தை 38 – 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலகுவாக வீழ்த்தியது.
இப் பிரிவில் வத்தளை கூடைப்பந்தாட்ட சங்க அணியும் 2 வெற்றிகளை ஈட்டியது.
ரெட் டெவில்ஸ் அணியையும் (30 – 17), சினெர்ஜி அணியையும் (34 – 22) வத்தளை கூடைப்பந்தாட்ட சங்கம் வெற்றிகொண்டது.
ஓல்ட் கேம்ப்றியன்ஸ் கழகம் தனது 2 போட்டிகளில் சினெர்ஜி (31 – 22), மஹரகம (27 – 06) ஆகிய கழகங்களை வெற்றிகொண்டது.
45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் 76சர்ஸ் கழகம் 2 வெற்றிகளை ஈட்டி முன்னிலையில் திகழ்கிறது.
ஓல்ட் பென்ஸ் கழகத்தை 30 – 18 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் 2ஆவது போட்டியில் நெட்ஸ் பின்க் அணியை 19 – 11 என்ற புள்ளிகள் வித்தியாசத்திலும் 76சர்ஸ் அணி வெற்றிகொண்டது.
இரண்டாம் நாள் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (05) தற்போது நடைபெற்றுவருகின்றன.