இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கேரள அரசு கவுரவித்தது. சபரிமலை தேவசம் போர்டும், கேரள மாநில அரசும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி வருகிறது. சபரிமலையின் புகழை பரப்பும் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இந்த விருதினை இதற்கு முன்னதாக, கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதினை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று (ஜன.,15) விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், Worshipful Music Genius என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு விருது வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.