துக்ளக் இதழின் 50ம் ஆண்டு நிறைவு விழாவில், அரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போய் உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 50 ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். துக்ளக் இதழின் சிறப்பு மலரை வெங்கையா வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
பல ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து துணை ஜனாதிபதி ஆனவர் வெங்கையா நாயுடு. மக்கள் சேவை என்பது தந்தைக்குரிய பதவி. சோவை தொடர்ந்து துக்ளக் இதழை சிறப்பாக கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு ஜீனியஸ். அவர் ஜீனியஸ் என்பதை நிரூபிக்க தேர்ந்தெடுத்த துறை பத்திரிக்கை துறை. அதில் அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். சோ ராமசாமியையும், துக்ளக்கையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்களில் இருவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் பக்தவத்சலம். முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.
தற்போதைய சூழலில் காலம், அரசியல், சமுதாயம் மிகவும் கெட்டுப் போய் உள்ளது. சோவிற்கு பிறகு, துக்ளக் பத்திரிகை நடத்தப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சோ மாதிரியான பத்திரிக்கையாளர் தான் தற்போது மிக அவசியம். பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலக்க கூடாது. கவலைகளை நிரந்தரமாக்கிகொள்வதும், தற்காலிகமாக்கி கொள்வதும் நமது கையில் தான் உள்ளது.
இவ்வாறு ரஜினிகாந்த பேசினார்.