ஸ்பெயின் நாட்டின் சோஷலிச கட்சித் தலைவர் பெட்ரோ சான்செஸ் (46) அந்நாட்டின் புதிய பிரதமராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தலைநகர் மேட்ரிட்டில் உள்ள ஜரஜூலா அரண்மனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் 6-ம் பெலிப் முன்னிலையில் சான்செஸ் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இடதுசாரி உள்ளிட்ட இதர சிறு கட்சிகளின் ஆதரவு பெற்ற சிறுபான்மை அரசுக்கு சான்செஸ் தலைமை ஏற்றுள்ளார்.
பொருளாதார துறை முன்னாள் பேராசிரியரான சான்செஸ், இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். கேட்டலோனியா தனி நாடாக பிரகடனம் செய்து கொண்டது, பொருளாதார நெருக்கடி உட்பட கடும் சவால்களை இவர் எதிர்கொண்டு சமாளிக்கவேண்டியுள்ளது.
பழமைவாத மக்கள் கட்சியைச் சேர்ந்த மரியானோ பிரதமராக இருந்தார். அவர் மீது ஊழல் புகார் எழவே அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானம் வெற்றி பெற்றதையடுத்து அவர் பதவி விலகினார். ஸ்பெயின் 1977-ல் ஜனநாயகப் பாதைக்கு திரும்பியது. அதன் பிறகு பிரதமர் ஒருவர் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை இழந்திருப்பது இதுவே முதல் முறை.