அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க விடுத்துள்ள விசேட கட்டளையின் பிரகாரமே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. “இராணுவ அதிகாரி ஒழுக்கமானவராக இருத்தல் வேண்டும், இராணுவ அதிகாரிகள் சகலரையும் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவேண்டும் என்பதே இராணுவத் தளபதியின் நிலைப்பாடாகும்” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சில விடயங்கள் தொடர்பில், இராணுவம் பதிலளிக்கவேண்டிய தேவையில்லை என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளாரென அறியமுடிகின்றது.