ஏமன் நாட்டில் உள்ள சாகோட்ரா தீவில் கடந்த மாதம் 24-ந் தேதி ‘மேகுனு’ புயல் தாக்கியது. அதில், 38 இந்தியர்கள், புயலில் சிக்கி பரிதவித்தனர். போதிய உணவு, குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இதுபற்றி இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கையாக, ஏடன் வளைகுடாவில் இருந்த ஐ.என்.எஸ்.சுனய்னா கப்பல், சாகோட்ரா தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று அங்கு போய் சேர்ந்த அக்கப்பல், பரிதவித்த 38 இந்தியர்களையும் பத்திரமாக மீட்டது. கப்பலில் அவர்களுக்கு மருத்துவ உதவி, உணவு, குடிநீர் மற்றும் குடும்பத்தினருடன் பேச தொலைபேசி வசதி அளிக்கப்பட்டது. அவர்களுடன் அக்கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் நோக்கி விரைந்தது. இத்தகவல்களை கடற்படை செய்தித்தொடர்பாளர் டி.கே.சர்மா தெரிவித்தார்.