அமெரிக்க ராணுவ வீரர்களின் குடும்பங்களை ஏற்றி செல்லும் பயணிகள் விமானம், புறப்பட தயாரானபோது திடீரென தீப்பற்றியது. இருப்பினும் அதிலிருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு ராணுவ துருப்புகள், அவர்களது குடும்பங்களை ஓம்னி ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்கிறது.
அவ்வாறு வரும் விமானங்கள், அயர்லாந்தில் உள்ள ஷெனான் விமான நிலையத்தில் எரிபொருளை நிரப்பி செல்வது வழக்கம். அந்தவகையில், வியாழக்கிழமை காலை, அந்நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767-300 ரக விமானம் பயணிகளுடன் புறப்பட தயாரானபோது, திடீரென அதன் லேண்டிங் கியர் பகுதியில் தீப்பற்றி, புகை கசிந்தது.
இதையடுத்து உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என ஓம்னி ஏர் இன்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து,ஷெனான் விமான நிலையத்தில் சில விமானங்களின் சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.