குடிபோதையில் விமானியின் அறைக்குள் நுழைந்து தகராறு செய்த முதியவரால் ஹங்கேரியில் இருந்து ஐஸ்லாந்துக்குப் புறப்பட்ட விஸ் (Wizz) ஏர் விமானம், நார்வேயில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
நார்வே வான்பரப்பில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது வியாழனன்று காலை 10 மணியளவில் அதீத குடிபோதையில் இருந்த ஐஸ்லாந்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் திடீரென விமானிகள் அறையான காக்பிட்டிற்குள் நுழைந்தார்.
விமானத்தைக் கடத்தப் போவதாக கலாட்டா செய்ததையடுத்து விமானி இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். ஸ்டேவெஞ்சர் (Stavanger) விமான நிலையத்தை பராமரிக்கும் அவினோர் நிறுவனம் காவல்துறைக்கு தகவல் அளித்ததோடு விமானம் தரையிறங்கவும் ஏற்பாடு செய்தது. இதையடுத்து நார்வே போலீசார் ரகளையில் ஈடுபட்ட முதியவரைக் கைது செய்தனர்.
வான்போக்குவரத்து விதிகளின் படி, விமான பணிக்குழுவின் அறிவுறுத்தல்களை மீறுவோருக்கு 6 மாதங்களும், விமானம் அல்லது விமானப் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அத்து மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.