“யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுச் செல்லும் போக்கு அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டு விவசாயத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் 32 சதவீதத்தினர் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு அது 27 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது ஆபத்தானது. யாழ்ப்பாணத்தின் பிரதான வருமான ஈட்டங்களில் ஒன்றான விவசாயத்தை விவசாயிகள் கைவிட்டுச் செல்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:-
“போருக்கு முன்னர் யாழ்ப்பாண மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவுக்கு கிட்ட இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. இராணுவத்தினரின் பிடியில் மக்களின் விவசாய நிலங்கள் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். வரவு – செலவுத் திட்டத்தில் விவசாயத்துறையின் ஊடாக வடக்குக்கு ஒதுக்கப்பட்டது நிதி போதாது.
கால்பங்கினர் விவசாய சமூகத்தினர்
யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையின் 27 சதவீதமானோர் விவசாயம் சார்ந்த குடும்பங்களாகும். நேரடியாக விவசாயத்தை 31 ஆயிரத்து 927 குடும்பங்கள் முன்னெடுக்கின்றன. விவசாயத் தொழிலாளர்களாக 20 ஆயிரத்து 322 குடும்பங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்த சனத்தொகையின் கால் பங்குக்கும் அதிகமானோர் விவசாயத்திலேயே தங்கி வாழ்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் மாதாந்த வருமானம் 5 ஆயிரத்துக்கு குறைவாகவே பெறுகின்றனர் என்பது வேதனையான விடயம். ஒட்டுமொத்த யாழ்ப்பாணச் சனத் தொகையின் 56 சதவீதத்தினரின் மாத வருமானம் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கின்றது என்ற மாவட்டப் புள்ளிவிபரத்தையும் இந்தச் சந்தர்பத்தில் சபைக்குச் சமர்பிக்கின்றேன். விவசாயத் தொழிலைச் செய்வோர் குறைந்து செல்கின்றனர் என்ற தகவலையும் இங்கு பதிவு செய்கின்றேன்.
மைத்திரி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
விவசாயமே இந்த நாட்டின் முதுகெலும்பு என்று நாம் கூறிக்கொண்டு விவசாயிகள் தொழிலைக் கைவிட்டுச் செல்வதை வேடிக்கை பார்க்க முடியாது. காலநிலை ஏமாற்றத்தினாலும், திட்டமிட்ட புறக்கணிப்பாலும் இழப்புக்களைச் சந்தித்து தொழிலைக் கைவிடும் விவசாயிகளை மீளவும் விவசாயத்தை முன்னெடுக்க ஊக்குவிக்கவேண்டும்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் எங்களது விவசாயிகள் நேரடியாகக் கோரியிருந்தனர். அதற்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
உரிய காலத்தில் உதவி இல்லை
கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுதானியப் பயிர்செய்கை, நெல் உற்பத்தி என்பவற்றில் உரிய இலக்கை அடையமுடியவில்லை. காலநிலை பெரும் பிரச்சினையாக உள்ளது. காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அரசின் உதவி உரிய காலத்தில் சென்றடையவில்லை.
வடக்கு மாகாணசபை தனக்கு ஒதுக்கப்படும் சொற்ப நிதியில், மரநடுகையை முன்னெடுக்கின்றது. இதனை கொழும்பு அரசு ஊக்குவிக்வேண்டும். மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப எமது விவசாயிகளையும் பணம் பெறும் பழச் செய்கையில் ஊக்குவிக்க வேண்டும்.
புகையிலைச் செய்கை
புகையிலைச் செய்கை தொடர்பில் இதன்போது சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் புகையிலையைப் பணப் பயிர் என்றுதான் சொல்லுவார்கள். அதனூடாக பெருமளவு இலாபத்தை விவசாயிகள் பெற்றுக்கொண்டனர்.
இந்த அரசு 2020இல் புகையிலையை முழுமையாகத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவது தமிழ் விவசாயிகள்தான். அவர்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கைக்கான முழுமையான ஊக்குவிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. பெயரளவில் மாற்றுப் பயிர் செய்கைக்கு அவர்களை ஊக்குவிப்பது பொருத்தமாக இருக்காது.
புகையிலைச் செய்கையின் ஊடாக அவர்கள் பெற்றுக் கொண்ட இலாபத்துக்கு நிகரான இலாபத்தை மாற்றுப் பயிர்ச் செய்கையின் ஊடாக அவர்கள் பெற்றுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் புகையிலைச் செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் அதிலிருந்து விடுபட்டு முழுதாக மாற்றுப் பயிர்ச் செய்கைக்கு மாறுவார்கள்.
விவசாயிகள் காலநிலையால் பாதிக்கப்படுவது போதாது என்று, கால்நடைகளும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கட்டாக்காலி கால்நடைகளால், காலநிலையில் தப்பி வளரும் பயிர்கள் கூட அழிக்கப்படுகின்றன. பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படவேண்டும். இந்த உதவிகள் உடனடியாக வழங்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.