ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களும், அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து தீவிர மந்திராலோசனைகளை நடத்தியதாக அறியமுடிகின்றது.
நேற்று சுமார் இரண்டுமணிநேரம் நடைபேற்ற இந்தச் சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்வரும் தேர்தல் கூட்டு என்பன பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
கூட்டு எதிரணி முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் தேர்தல் தொடர்பிலான கோரிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சாதகமாக பரிசீலிக்காத பட்சத்தில் அவர்களுடன் கூட்டுச்சேர்வது என்ற பேச்சுக்கே இடமில்லையென நேற்றைய பேச்சில் கலந்துகொண்ட அமைச்சர்களிடம் முன்னாள் ஜனாதிபதி திட்டமிட்டவாறு தெரிவித்திருப்பதாக அறியமுடிகின்றது.
நேற்றைய சந்திப்பின் பின்னர் மேற்படி அமைச்சர்மார் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்துக் கலந்துரையாடவும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அத்துடன், நேற்றிரவு நடைபெற ஏற்பாடாகியிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் இதனை ஆராய தீர்மானிக்கப்பட்டிருந்தது.