‘மும்பை தாக்குதலின் மூளையாகக் கருதப்படும், பயங்கரவாதி, ஹபீஸ் சயீதை விடுதலை செய்துள்ளதால், பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிக்கும் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்’ என, பாதுகாப்பு துறை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மும்பையில், 2008ல், நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜமாத் உத் தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதை, பாகிஸ்தான் நீதிமன்றம் விடுவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அமெரிக்காவைச் சேர்ந்த, பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியதாவது: ஐ.நா., மற்றும் அமெரிக்காவால், பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீது, பாகிஸ்தானில் பல்வேறு பேரணிகளை நடத்தி வந்துள்ளான். மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் அவனை ஆஜர்படுத்தாமல், பாக்., தடுத்து வந்துள்ளது. தற்போது, ஹபீஸை பாக்., நீதிமன்றம் விடுவித்துள்ளது; இது, பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாக பாக்., கூறி வருவதற்கு எதிராகவே உள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாக்., ஆதரவு அளித்து வருவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
‘நாட்டோ’ எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பில் உள்ள நாடுகள் இடையே ராணுவ ஒத்துழைப்பு அளிப்பதற்கு இணையான ஒத்துழைப்பை, அந்த அமைப்பில் இல்லாத பாகிஸ்தானுக்கு அளிப்பதால், அதற்கு, ‘மேஜர் நான் நாட்டோ’ நாடு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. அந்த அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்; இதை அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் உடனடியாக செய்வதன் மூலமே, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.