விசேட தேவையுடைய இராணுவத்தினர் முன்னெடுத்துள்ள போராட்டம் ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.
சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டம் இன்றும் தொடர்கிறது.
சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றபோதும் அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.
அத்தோடு அவர்கள் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொடவை சந்தித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில், தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் சத்தியாகிரக போராட்டம் தொடரும் என இராணுவத்தினரை பாதுகாக்கும் தேசிய சக்தியின் தலைவர் யூ.டி. வசந்த தெரிவித்துள்ளார்
இதேவேளை, சாகும்வரையில் சகல வேதனங்களும் கொடுப்பனவுகளும் வழங்குவது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் ஒன்று இன்றைய தினம் முன்வைக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.