நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான விசேட சலுகையை தமது அரசாங்கத்தில் இரத்து செய்வதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மாத்தரையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு கூறினார்.சஜித் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளதாவது, “5 வருடங்களுக்கு ஒரு முறை, நாடாளுமன்றுக்குத் தெரிவாகும் உறுப்பினர்களுக்கு தீர்வை வரி விதிப்பில்லாத வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதை மக்கள் அனைவரும் அறிவார்கள்.
எமது ஆட்சியில் இந்த அனுமதி பத்திரத்தை நாம் இல்லாது செய்வோம். இதன் ஊடாக மீதப்படும் பணத்தைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்வோம் என்பதை இவ்வேளையில் நாம் உறுதியுடன் கூறிக்கொள்கிறோம்.
இந்த நாட்டிலிருந்து போதைப்பொருளை முற்றாக அழித்தொழிக்கும் செயற்பாட்டை, நாம் எமது ஆட்சியில் ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல், அதனை முடிவுக்கும் கொண்டுவருவோம் என்பதையும் கூறிக்கொள்கிறோம்.
மக்களின் மனங்களில் இருக்கும் துயரங்களை போக்க, பிரேமதாஸவின் மகனான எனக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நாம் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.