ஜனாதிபதி தேர்தலுக்காக, தமிழ் மக்களின் 13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் மீண்டும் சந்தித்து கலந்துரையாடவுள்ளன.
அதன்படி குறித்த கட்சிகள் யாழில் நாளை மறுதினம் சந்தித்து கலந்துரையாடவுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவை எடுப்பதற்காக, கொழும்பில் ஐந்து கட்சிகளின் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டபோதும் அதில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரனும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஐந்து கட்சிகளும் கூடி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
எனினும் எதிர்வரும் 31ஆம் திகதியும் நவம்பர் முதலாம் திகதியும் அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதால், நேரகாலத்துடன் ஒரு முடிவை அறிவிக்க வேண்டியுள்ளதன் அவசியம் கருதி, இந்தக் கூட்டத்தை நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளையும் பொது இணக்க ஆவணத்தில் ஒப்பமிட ஏற்பாடுகளைச் செய்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளே மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.