ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புக்களை நடத்தி, வாக்காளர்களை குழப்பும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தேர்தல்கள் ஆணைக்குழு சில விடயங்களை தற்போது கண்காணித்து வருகிறது.
அதாவது, சில தனியார் வகுப்புகளிலும் சில தனியார் நிறுவனங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புக்கள் நடத்தப்படுவதாகவும் இதன் பிரதிபலன் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இது ஒருசில நபருக்கு, தாங்கள் வாக்களிக்கும்போது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சட்டத்தின் 72ஆவது உறுப்புரிமையில், இது குற்றமாகவே கருதப்படுகிறது.
அத்தோடு, குறித்த நிறுவனங்களில் வேலை செய்யும் ஒரு சிலர் மற்றும் குறித்த தனியார் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களின் கருத்தை, ஒட்டுமொத்த நாட்டின் பெறுபேறாக கருதுவதும் பாரிய குற்றமாகும்.
தேர்தலொன்றின்போது செலுத்தப்பட்ட வாக்குகளின் பெறுபேறுகள் இன்னொரு தரப்பினரை பாதிக்காத வகையில்தான் வெளியிடப்பட வேண்டும்.
அதாவது, தபால் மூல வாக்களிப்பின் பெறுபேற்றை, சாதாரண வாக்களிப்புக்கள் முடிவடைந்த பின்னர்தான் வெளியிடவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால், அது ஏனைய வாக்காளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே, இவ்வாறான செயற்பாடுகளை கைவிடுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து பிரஜைகளிடமும் கேட்டுக்கொள்கிறது” என மேலும் தெரிவித்தார்.