பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதற்கமைய இன்று மாலை வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ள அவர், மாலை 3 மணிக்கு வவுனியா பொது வைத்தியசாலையில் சுகாதாரதுறை மேம்படுத்தல் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கவுள்ளார். உலக வங்கியின் நிதியுதவியில் இந்த கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், நெதர்லாந்து அரசாங்கத்தின் இலகு கடன் உதவியில் அமைக்கப்படவுள்ள இருதய மற்றும் சிறுநீரக சிகிச்சை பிரிவிற்கான அடிக்கல் நாட்டவுள்ளார். இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, வடக்கு ஆளுனர் சுரேன் ராகவன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வுகளின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ள அவர், நாளை காலை 7 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். அதன்பின்னர் நல்லை ஆதீன சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அங்கு சைவ சமய தலைவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதோடு, சைவ மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
அதன் பின்னர் காலை மைலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்கவுள்ள பிரதமர், தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 10 வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளார்.
அதன் பின்னர் 11 மணியளவில் திருநெல்வேலி விவசாய திணைக்கள பயிற்சி நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில், பொதுமக்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கவுள்ளார்.
அத்தோடு, மதியம் 2 மணிக்கு குருநகர் மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதோடு, 3.15 மணிக்கு சாவகச்சேரி வைத்தியசாலையின் இயன் சிகிச்சை பிரிவை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் யாழ். நாகவிகாரையில் வழிபாடுகளிலும் பிரதமர் ஈடுபடவுள்ளார்.
இதேவேளை, நாளை மறுதினம் காலை 9 மணிக்கு இந்தியாவினால் யாழில் அமைக்கப்படும் கலாசார நிலைய கட்டுமான பணிகளை பிரதமர் பார்வையிடவுள்ளதோடு, 10 மணிக்கு யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.