சிட்னி விலவூட் தடுப்புமுகாமில் தங்களுக்குள் கைலப்பு மற்றும் சச்சரவில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி சிட்னி, விலவூட் தடுப்புமுகாமில் பாரிய கைகலப்பு சம்பவமொன்று இடம்பெற்றது. இதில் சுமார் 15 பேர் பங்குகொண்டார்கள் என்றும் சம்பவத்தினை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்த அலுவலர்களும் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், அந்த இடத்திலிருந்து கூரான பொருட்கள் சில மீட்கப்பட்டிருந்தன. இவை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு பொலீஸாரிடம் இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டது.
பொலீஸார் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 22 வயதுக்கும் 36 வயதுக்கும் இடைப்பட்ட எட்டுப்பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.
இவர்களில் நால்வர் பொலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, மிகுதி நால்வரும் விலவூட் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கபட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.