மொஸ்கோவில் தவிக்கும் கனேடிய பெண்
ரொறன்ரோவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருந்து நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பபட்டுள்ளது.
கனடாவில் நிரந்தர வதிவிட அந்தஸ்துடைய 56 வயதான Gyulzar Julia Yakobi என்பவர் கடந்த ஜூலை 25 ஆம் திகதி மருத்துவத் தேவைகளின் நிமித்தம் ரஷ்யா சென்றிருந்தார். இந்நிலையில், அவருடைய நிரந்தர வதிவிட அட்டை கடந்த டிசம்பர் மாதத்தில் காலாவதியாகியது.
எனினும் கனேடிய சட்டத்தின் பிரகாரம் காலாவதியான நிரந்தர வதிவாளர் அட்டைகளை உடையவர்கள் கனடாவிற்கு வெளியே பயணங்களை மேற்கொள்வது சட்டவிரோதமானது அல்ல. அவர்கள் மீண்டும் கனடாவிற்குத் திரும்புவதற்காக அவசர பிரயாண ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்காக மொஸ்கோவில் அமைந்துள்ள கனேடிய தூதரகத்தை அணுகிய அவரிடம், நிரந்த வதிவிட அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கான குறிப்பிட்ட காலப்பகுதியில் Gyulzar Julia Yakobi கனடாவில் தங்கி இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அவருடைய ஆவணங்கள் மறுபரிசீலனை செய்யப்படுவதாகவும் மேன்முறையீடு செய்வதன் மூலம் அது தொடர்பான முடிவொன்றை எட்ட மூன்று வருடங்கள் எடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் Gyulzar Julia Yakobi ஐ மீண்டும் கனடாவிற்கு அழைத்துவர அவரது குடும்பத்தினர் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.