“அரசியல் கூட்டு” என கூடுகின்ற கூட்டங்கள் எல்லாமே ஒரு புரோக்கர் கூட்டங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி கல்வயல் பாலத்துக்கான அடிக்கல்லை நட்டுவைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்க் கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு ஒரு சிலர் கொழும்பில் கூடியிருந்தார்கள். அவர்கள் ஏன் கொழும்பில் ஒன்றுகூடினார்கள்? தமிழ்ப் பிரதேசத்தில் கூட்டம் கூடவில்லை?
ஏனெனில் அவர்கள் கொழும்பை மையமாகக் கொண்டவர்கள். அவர்களது பிள்ளைகள் தென்பகுதியில் திருமணம் செய்திருப்பார்கள். அவர்கள் கொழும்பை மையமாக கொண்டு வாழ்பவர்கள்.
தென்பகுதியில் இருக்கிற, தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் திரும்பவும் இனவாதத்தை உருவாக்கி அதனூடாகத் தாம் ஆட்சியை மீள கட்டியெழுப்பலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்கள் தரகு வேலை பார்க்கின்றார்கள்.
ஆனால் மக்கள் தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள். அதனால் இவர்களது கூட்டம், அவர்களது கூட்டமாகத்தான் இருக்கிறது, அது மக்களது கூட்டமாக இல்லை.
தமிழ் பிரதிநிதிகள் என சொல்பவர்களால் வட மாகாணத்தில் அல்லது தமிழ்ப் பிரதேசத்தில் அந்தக் கூட்டத்தைக் கூட்டத் தெரியாதவர்கள் கொழும்பில் ஹோட்டல்களில் கூடியமை ஒரு வெட்கக்கேடான விடயம் என தெரிவித்தார்.










