ஐரோப்பிய ஒன்றியத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டு சிறிலங்கா அரசாங்கத்திற்கு மீள வழங்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளது.
குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மஹிந்தவை அதிரடியாக பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பத்திற்கு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி தீர்வு காணுமாறு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கையுடான கோரிக்கையை விடுத்திருந்தது.
எனினும் இவற்றை முழுமையாக உதாசீனம் செய்த நிலையில் சிறிலங்கா அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை கலைத்ததுடன், பொதுத் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில், ஜி.எஸ்.பி வரிச் சலுகையை மீளப் பெறுவதற்கு காரணமாக அமைந்த முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்ள்ளமை, மற்றும ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை நிராகரித்த நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளமை ஆகிய சம்பவங்களுக்கு மத்தியிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டக்குழு கொழும்பிற்கு விஜயம் செய்யவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியில் இடைநிறுத்தப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கடந்த 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சி பீடமேறிய பின்னர் ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்டிருந்தது.
ஏழு வருடங்களுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை ஸ்ரீலங்காவிற்கு வழங்கப்பட்டதுடன், இதன்மூலம் ஆடை ஏற்றுமதிச் சந்தைக்கு பாரிய நன்மை கிட்டியிருந்தது.
இந்த சலுகையை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல்பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச சாசனங்களை செயற்றிறன்மிக்க வகையில் அமுல்படுத்தி, அவற்றை நிலை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீலங்கா உறுதி வழங்கியிருந்தது. ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பெறும் அனைத்து நாடுகளினதும் அரசாங்கங்களுடன் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி, வரிச் சலுகைக்கான அடிப்படைகளை உறுதி செய்வதாக ஐரோப்பிய ஆணைக்குழு கூறியுள்ளது.
இதன்பொருட்டு அந்தந்த நாடுகளுக்கு வழக்கான விஜயங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஐரோப்பிய ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஜி.எஸ்.பி வரிச் சலுகையை பெறுவதற்கான நிபந்தனைகளின் மீளாய்வு அடங்கிய அறிக்கை இறுதியாக கடந்த ஜனவரி மாத ஆரம்பத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான நிபந்தனை மீளாய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு, ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.