ஜனநாயக விரோதிகளை தோற்கடிக்கின்ற புதிய கூட்டணி ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நேற்று இரவே ஆரம்பிக்கப் போவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்திருக்கின்றார்.
ஜனாநாயகத்தை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்: ‘என்னவிருந்தாலும் இனப்பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மக்கள் பிழைத்து, வாழ்ந்தும், இளைஞர்கள் அழிவதும் இனப்பிரச்சினையினால் தான். இதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எதிர்கட்சியில் இருக்கும் தரப்பினர் குழப்பம் ஏற்படுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இதனை தீர்ப்பதற்கு முன்வந்தபோது ஐக்கிய தேசியக் கட்சி குழப்பியது. ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்தபோது சுதந்திரக் கட்சி தடுத்தது. எனவே இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருக்கையிலேயே தீர்த்துவிடுவோம் என்று தேசிய அரசை உருவாக்கினோம். எனினும் இரண்டு தரப்பினரும் நாட்டின் தேசியப் பிரச்சனைகளை தீர்க்காது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர்.
இவ்வாறுதான் அரசாங்கம் அழிவடைந்தது. இதனை நிறுத்த மைத்திரிபால சிறிசேன முயற்சிக்கவில்லை. நாங்கள் சிறப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து இறுதி வருடத்தில் தேர்தலுக்கு தயாராகினோம். எனினும் அந்த மனிதர் அனைத்தையும் குழப்பிவிட்டார். எனினும் இதுவும் நன்மைக்குத்தான். இப்போது உதவாக்கறைகள் இல்லை. தலைவர்கள் பின்னால் சென்று யார் சரியானவர்கள் என்று கண்டுபிடிப்பதை விட எது சரி என்பதை கண்டுபிடித்து கூட்டணி அமைப்போம். நேற்று இரவும் அதனை அமைப்பதற்குத்தான் செல்கிறேன். அதில் தலைவர்கள் அனைவரும் இணைந்து தலைவர்கள் சபையினூடாக அரசை கொண்டுசெல்வோம். கூட்டணியில் இரண்டு, மூன்று நிறங்கள் இல்லை, வானவில் கூட்டணியாக அணிதிரள்வோம்” என்றார்.